உண்மையான ஒரே திருச்சபையை கண்டுபிடிப்பது எவ்வாறு?

how-to-find-the-true-church

இன்று உலகத்தில் பல்லாயிரக்கணக்கான சபைகள் உள்ளன. அவை அனைத்தும் தங்கள் தான் உண்மையான கிறிஸ்துவ சபை என்று கூறிக்கொள்கின்றன. அவற்றின் நிறுவனர்கள் தங்கள் தூய ஆவியாரின் தூண்டுதலினாலேயே அந்த சபையை நிறுவினார்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர். ஒரு சபையின் நம்பிக்கைகளும், கோட்பாடுகளும், போதனைகளும், ஒன்றுக்கு  ஒன்று முரண்பாடாகவே உள்ளன.  கிறிஸ்துவின் உடலான திருச்சபை இவ்வாறு பல துண்டுகளாக உள்ளது. அனால் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வாறாக அவரது சீடர்களுக்கு வேண்டினார்.   

“தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.  நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.  இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.” (யோவான் 17:11,21-23)

கிறிஸ்துவின் சொற்படி, கிறிஸ்துவர்கள் அனைவரும் ஒற்றுமையை இருந்தால் தான் உலகம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும். 

கிறிஸ்துவர்கள் ஒற்றுமை ஆவதற்க்கு சபைகள் ஒன்றாக வேண்டும். இன்று பல்லாயிரக்கணக்கான சபைகள் இருக்குபோது இது சாத்தியமா? இயேசு கிறிஸ்து நிறுவிய திருச்சபையோடு அணைத்து சபைகளும் ஒன்றித்தால் இது சாத்தியமே. அது என்ன கிறிஸ்து நிறுவிய திருச்சபை? 

படிக்கவும்: முதலில் பிறந்தது திரு அவையா (திருச்சபை) திருவிவிலியமா (பைபிள்)?

 “எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. “(மத் 16:18)  

இங்கு இயேசு, தான் ஒரு திருச்சபையை தான் கட்டுவேன் என்கிறார், பல சபைகளை அல்ல.  இயேசு தான் காட்டுவேன் என்று சொன்ன திருச்சபை பெந்தக்கோஸ்து நாளில், தூய ஆவியாரால் பிறந்ததை  நாம் காண்கிறோம்.  இன்றும்  அந்த திருச்சபை உள்ளதா? அதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பதனை இங்கு காண்போம். 

நான்கு அடையாளங்கள் 

கிறிஸ்து நிறுவிய திருச்சபைக்கு நான்கு அடையாளங்கள் உள்ளன என்பதை நாம் திருவிவிலியம் மூலம் அறிந்துக்கொள்ளலாம். அவை 

  1. ஒரே திருச்சபை 
  2. தூய திருச்சபை 
  3. திருத்தூதுவத் திருச்சபை 
  4. அகில உலக திருச்சபை 

ஒரே திருச்சபை 

. “ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்” (யோவா 10:16) என்று இயேசு கிறிஸ்து  ஆரம்பத்தில் வாக்குக் கொடுத்திருந்தார். மேலும் அவர், “தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.” (யோவா  17:11) என்றும் வேண்டினார்.

பவுல் அடிகளார் எபேசியருக்கு எழுதிய திருமுகலத்தில், “நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே.  அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே.” (எபே 4:4-5) என்றும்  கொரிந்தியர்களுக்கு எழுதிய திருமுகத்தில்,  “அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.” (1 கொரி 10:17) என்றும் கூறுகிறார். இவை திருச்சபை ஒன்று தான், ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கான திருவிவிலிய சான்றுகள்.  

தூய திருச்சபை 

திருத்தூதர்களின்  திருச்சபை தூயதாக இருந்தது. அதாவது அந்த திருச்சபையை இறைவனாம் இயேசு கிறிஸ்துவே நிறுவியதால் அது தூய்மையானதாக இருந்தது. ஆனால் திருச்சபை தூயதாக இருப்பதால், அதன் உறுப்பினர்கள் அனைவரும் பாவத்தை முற்றிலும் துறந்தவர்கள் என்று கூறி விட முடியாது. தொடக்கம் முதலே, திருச்சபை பாவிகளையே உள்ளடக்கியது. “பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் ” (1 திமொத்தேயு 1:15).  கிறிஸ்துவின் பணியான உலகை மீட்பதையும்   தூய்மைபடுத்துவதையும் தொடரவே இவ்வுலகில் திருச்சபை நிறுவப்பட்டது. இவ்வாறு தொடக்கம் முதலே, திருச்சபை, தன்னுள் உள்ள பாவிகளை, தூய வாழ்வு நோக்கியே அவர்களை வழிநடத்த திருவருள்சாதனங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இதனாலயே தூய பவுல் அடிகளார் இவ்வாறு எழுதுகிறார், “கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.” (எபே 5:25-27).

திருச்சபையின் தூய்மை என்பது அதன் நிறுவனரான இயேசு கிறிஸ்துவின் தூய்மையினால் தான். அதன் உறுப்பினர்களால் அல்ல.

திருத்தூதுவத் திருச்சபை

இயேசு  கிறிஸ்து ஏற்படுத்திய திருச்சபை திருத்தூதுவர்களின் மேல்  திருச்சபை. அவர் அவர்களிடம், “”பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அல்லவா?” (யோவா 6:70) என்று கேட்டார். இன்று பிரிவினை சபையினர், தெருவுக்கு தெரு எந்த ஒரு அதிகாரமின்றி, அவர்களாகவே சபைகளை நிறுவுவது போல் அன்று திருத்தூதர்கள் அவர்களுக்குள்ளையே “சபைகளை” உருவாக்கிக்கொள்ளவில்லை. “யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்.” (எபி 5:4).

புதிய ஏற்பாட்டில் நமக்கு இருக்கும் சான்றுகள் மூலம், திருத்தூதர்கள், தாங்கள் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து  பெற்று அதிகாரத்தை அடுத்தடுத்து உள்ள தலைமுறையினரை  ஆயர்களாக திருநிலை படுத்த அதிகாரம் பெற்று இருந்தனர் என்பதை அறிகிறோம். “நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.” (1 தீத்து1:5).  திருத்தூதர்கள் கொண்டு இருந்த அந்த அதிகாரம் இன்று வரை அவர்களின் வழித்தோன்றியவர்களான ஆயர்கள் மூலம் தொடர்ந்து வந்துக்கொண்டுருக்கிறது.

“நீங்கள் எப்போதும் என்னை நினைவுகூர்கிறீர்கள்; நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடைப்பிடிக்கிறீர்கள்; எனவே உங்களைப் பாராட்டுகிறேன்.” (1கோரி 1 1:2)

“ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.” (2தெச 2:15)

திருத்தூதர்கள் யூதாஸின் இடத்தை நிரப்புவதற்கு ஆண்டவரின் வாழிகாட்டுதல்  வேண்டி  ஜெபித்து மத்தியாவை தேர்ந்தெடுத்தனர். 

” ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்.”அத்தகையோருள், இருவரை முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா. பின்பு அவர்கள் அனைவரும், “ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குறிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்கு பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு காண்பியும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.”  (தி ப 1:21-26)

“இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே.” (1 திமொ  4:14) என்று தூய பவுல் அடிகளார் திமொத்தேயுவுக்கு நினைவு படுத்தியதில், கைகள் வைத்து அவர் ஆயராக திருநிலை படுத்த பட்டுள்ளார் என்பதை  நாம் அறிகிறோம்.  மேலும் திமொத்தேயுவை, “அவசரப்பட்டு யாரையும் திருநிலை படுத்த வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார். (1 திமொ  5:22)

அகில உலக திருச்சபை

திருச்சபை ஒரே நோக்கத்துடன் உலகம் முழுதும் ஒரே அதிகாரத்தோடு இயேசு கிறிஸ்துவின் பணியை நிறைவேற்ற வேண்டும்.  திருச்சபை தொடங்கிய பொழுது, அளவில் சிறியதாக இருந்தாலும் இன்று உலக அளவில் பரவி உள்ளது.  

பெந்தக்கோஸ்து நாளில்  தூய ஆவியார் அனைத்துலக மக்கள் மீது ஆட்கொண்டது திருச்சபையின் உலகளாவிய தன்மையின் ஒரு அடையாளமாகவே நாம் கருத்தில் கொள்ளலாம். “அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.” (தி ப 2:5)

அன்று திருத்தூதர்கள் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்ற அருட்பொழிவு பெற்றனர்.  அங்கிருந்து உலகளாவிய திருச்சபை தொடங்கியது. பின்னர் தூய பவுல் உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறு எழுதுகின்றார், “உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் அருளைப்பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது.” (கொலோ1:6) 

இந்த நான்கு அடையாளங்களை கொண்ட திருச்சபை எது?

இன்று தெருவுக்கு ஒரு திருச்சபை என்று புற்றுகள் போல் பல்லாயிரக்கணக்கான சபைகள் இருக்கின்றன. அவற்றில் இந்த நான்கு அடையாளங்கள் இருக்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியே! அவர்களின் கூற்றுப்படியே அந்த சபைகளை நிறுவியவர் ஒரு போதகராகவே இருப்பார். இயேசு கிறிஸ்து நிறுவிய திருச்சபை மட்டுமே தூயதாக இருக்க முடியும். மனிதர்கள் தொடங்கிய எந்த ஒரு சபையும் தூயதாக இருக்க முடியாது. ஏனெனில், நாம் மேலே பார்த்தது போல், திருச்சபையை நிறுவியவர் துமையாக இருப்பதால் தான் அது தூய திருச்சபை. திருச்சபையின் உறுப்பினரகள் பாவிகளையும் உள்ளடைக்கியது. மேலும் சபைகளை நிறுவிய போதகர்கள் திருத்தூர்களின் வழித்தோன்றலில் அருட்பொழிவு இருக்காது. இதனால் திருத்தூதுவ திருச்சபை என்றும் அழைக்கமுடியாது. ஒரு சபையின் படிப்பினைகள் மற்றுமொரு சபையின் படிப்பினையோடு ஒத்துப்போகாது. இதனால் ஒரே திருச்சபை என்றும் அகில உலக திருச்சபை  கூற முடியாது. 

இந்த நான்கு அடையாளங்களையும் கொண்ட ஒரே திருச்சபை கத்தோலிக்க திரு அவை மட்டுமே. அதற்கான விளக்கங்களை கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி சுருக்கத்திலிருந்து காண்போம்.

ஏன் ஒரே திரு அவை என்கின்றோம்? (161)

திரு அவை ஒன்றே; ஏனெனில் அது ஒரே கடவுளின் மூன்று ஆட்களிடையே உள்ள ஒன்றிப்பை தனது ஊற்றாகவும் முன்மாதிரியாகவும் கொண்டிருக்கிறது. அதன் நிறுவனரும் தலையுமான இயேசு கிறிஸ்து ஓர் உடலாக எல்லா மக்களின் ஒன்றிப்பையும் மீண்டும் நிறுவினார். அதன் ஆன்மாவாகிய தூய  ஆவியார் இறைமக்கள் அனைவரையும் கிறிஸ்துவோடு நட்புறவில் இணைக்கிறார். திரு அவை ஒரே நம்பிக்கை, ஒரே அருள்சாதன வாழ்வு, ஒரே திருத்தூதர் வழிவருகை, ஒரே எதிர்நோக்கு, ஒரே அன்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. 

கிறிஸ்துவின் ஒரே திரு அவை எதில் உள்ளது? (162)

கிறிஸ்துவின் ஒரே திரு அவை இவ்வுலகில் நிறுவப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயாகமாக உள்ளது. அது பேதுருவின் வழித்தோன்றலாலும் அவரோடு ஒன்றித்துள்ள ஆயர்களாலும் வழிநடத்தப்படும் கத்தோலிக்கத் திரு அவையில் உள்ளது. இதன் வழியாக மட்டுமே ஒருவர் மீட்புக்கான வழிமுறைகளின் முழுமையை பெற முடியும்.ஏனெனில் பேதுருவை தலைவராகக்  கொண்ட திருத்தூதர் குழுவிடம் மட்டுமே புத்தி உடன்படிக்கையின் ஆசிகளையும் ஆண்டவர் இயேசு ஓப்படைத்துள்ளார்.

திரு அவை எவ்வாறு தூயதாக உள்ளது? (165)

திரு அவையின் காரணராக மிகத் தூய கடவுள் இருப்பதால் அது தூயதாக உள்ளது.  கிறிஸ்து திரு அவையை தூயதாக்கவும், அதை தூய்மையின் ஊற்று ஆக்கவும் தம்மையே அதற்க்கு கையளித்தார். தூய ஆவியார் அன்பினால் திரு அவைக்கு உயிரளிக்கிறார். இந்த திரு அவையில் தான் ஒருவர் மீட்புக்கான வழிமுறைகளின் முழுமையைக் கண்டு கொள்கிறார். புனித நிலை திரு அவையின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அழைப்பாகவும், திரு அவையின் எல்லாச் செயல்பாடுகளின் நோக்கமாகவும் இருக்கிறது. தன்னுடைய முன்மாதிரிகளும் பரிந்துரையாளர்களுமான கன்னி மரியாவையும் எண்ணற்றப்  புனிதர்களையும் தம் உறுப்பினர்களாக திரு அவை தன்  உறுப்பினர்களாக கொண்டிருக்கிறது. இம்மண்ணுலகில் எப்போதும் மனமாறவும், தூய்மை படுத்தப்படவும் வேண்டிய தேவையில் இருப்போருக்கும் தங்களை பாவிகளாக ஏற்றுக்கொள்ளும் திரு அவையின் பிள்ளைகளுக்கும், அதன் தூய்மையே புனிதத்தின் ஊற்றாக உள்ளது.

ஏன் “கத்தோலிக்கத்”  திரு அவை என்கின்றோம்? (166)

கிறிஸ்து திரு அவையில் உடனிருப்பதால் அது கத்தோலிக்கத் தண்மையை அதாவது அகில உலகத் தன்மையைப் பெறுகிறது; “இயேசு கிறிஸ்து எங்கு இருக்கிறாரோ அங்கு கத்தோலிக்கத் திரு அவை இருக்கிறது” (அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி). திரு அவை நம்பிக்கையின் நிறைவையும் முழுமையையும் அறிக்கையிடுகிறது. அது மீட்பின் வழிமுறைகளை தமிழ் முழுமையாக கொண்டு அவற்றை செயல்படுத்துகிறது. அது மானிடர் அனைவருக்கும் பணிபுரியக் கிறிஸ்துவால் அனுப்பப்படுகிறது.

(குறிப்பு: கத்தோலிக்க என்றல் உலகளாவிய என்று பொருள்)

திரு அவையை ஏன் திருத்தூதுவத் திரு அவை என்கிறோம்? (174)

திரு அவை தொடக்கமுதல் திருத்தூதுவத் திரு அவையாக இருக்கிறது; ஏனெனில் அது “திருத்தூதர்களை  அடித்தளமாகக்” (எபே 2:20) கொண்டு கட்டப்பட்டுள்ளது. திரு தூதர்களின் போதனையைக் கொண்டிருப்பதால், அது திருத்தூதுவத் தன்மையை பெற்றுள்ளது. கிறிஸ்து மீண்டும் வரும் வரை , பேதுருவின் வழித்தோன்றலின் ஒன்றிப்பில் உள்ள திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான ஆயரகள் வழியாக அது  கற்பிக்கப்பட்டு. புனிதப்படுத்தப்பட்டு, வழிநடத்தப்பட்டு வருவதால் இயல்பிலே திரு அவை திருத்தூதுவத் திரு அவையாகிறது. 

இந்த நான்கு அடையாளங்களையும் கத்தோலிக்க திரு அவையிலே மட்டுமே காண முடியும். கத்தோலிக்க திரு அவையோடு முழுமையான உறவு கொண்டிராத  கீழைத்  திருச்சபைகள், இந்த நான்கு அடையாளங்களை பெற்று உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 1054 ஆம் ஆண்டு கத்தோலிக்க திரு அவையிலிருந்து பிரிந்த சென்றதால் இந்த அடையாளங்களை இழந்தனர். மற்ற பிரிவினை சபைகளிலும் இந்த அடையாளங்களை  காண இயலாது. 

Related posts

Leave a Comment