1. ஒரு புனிதரின் திருநாள் எவ்வாறு நிர்ணயக்கப்படுகிறது ?
பொதுவாக ஒரு புனிதரின் திருநாள் அவரின் இறந்த நாளாக தான் இருக்கும். இறந்த நாள் தெரியாத போதும், ஒரே நாளில் பல புனிதர்களின் இறந்த நாள் இருப்பினும், வேறு சில தனிச்சிறப்பான காரணங்களாலும் வேறு நாட்களில் திருநாள் நிர்ணயக்கப்படுகிறது.
2. ஏன் ஒரு புனிதரின் திருநாள் அவரது இறப்பு நாளன்று கொண்டாடப்படுகிறது ?
ஒருவரின் இறப்பு அவரின் நித்திய விண்ணக வாழ்விற்கு நுழைவாயிலாய் இருப்பதால், ஒரு புனிதரின் திருநாள் அவரது இறப்பு நாளன்று கொண்டாடப்படுகிறது
3. பொதுவாக ஒரு புனிதரின் இறந்த நாளை கொண்டாடும் திருஅவை, மூன்று நபர்களின் பிறப்பை கொண்டாடுகிறது, யார் அவர்கள்? ஏன்?
- இயேசு கிறிஸ்து – கடவுள், நம் மீட்பர்.
- அன்னை மறியாள் – சென்ம பாவம் இல்லாமல் பிறந்ததால்.
- திருமுழுக்கு யோவான் – கருவிலே தூய ஆவியாரால் தூய்மை அடைந்ததால். (லூக்கா 1:15, 41).அவரது இறப்பு ஆகஸ்ட் 29ஆம் நாள் நினைவு கூறப்படுகிறது.
பி.கு. திருமுழுக்கு யோவான் சென்ம பாவம் இல்லாமல் பிறந்தார் என்பது கத்தோலிக்க திருஅவையின் கோட்பாடு அல்ல.
4. கத்தோலிக்க திருஅவை புனிதர்களின் திருநாளை மூன்று விதமாக கொண்டாடுகிறது. அவை யாவை?
1.பெருவிழா – மிக உயர்ந்த கொண்டாட்டம். அன்றைய திருப்பலியில் கண்டிப்பாக உன்னதங்களிலே மற்றும் நம்பிக்கை அறிக்கை (விசுவாச பிரமாணம்) பாடப்படும். மூன்று வாசகங்கள் இருக்கும். ஒரு ஞாயறுக்கிழமை திருப்பலி போன்று கொண்டாடப்படும். அனைத்து பெருவிழாக்களும் கடன் திருநாளாகாது. எ.கா.: உயிர்ப்புப் பெருவிழா, கிறிஸ்து பிறப்புப் திருநாள், திருஇருதய ஆண்டவர் திருநாள், தூய கன்னி மரியா இறைவனின் தாய் திருநாள், புனித திருமுழுக்கு யோவான் பிறந்ததினம், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருநாள், புனித சூசையப்பர் – தூய கன்னி மரியாவின் கணவர் திருநாள்.
2.விழா – பெருவிழாவிற்கு அடுத்த நிலை. அன்றைய திருப்பலியில் கண்டிப்பாக உன்னதங்களிலே பாடப்படும். அன்று இரண்டு வாசகங்கள் இருக்கும். எ. கா.: அதிதூதர்கள் விழா, புனித மத்தேயு திருநாள், புனித தோமா திருநாள், பல திருத்தூதர்கள் திருநாள்.
3.நினைவு மற்றும் விருப்ப நினைவு – கடைசி நிலை. புனிதர்களின் திருநாள் நினைவாக கொண்டப்படும். சில கட்டாய நினைவு. எ.கா.: புனித ஜான் போஸ்கோ திருநாள், பதுவா நகர் புனித அந்தோனியார், புனிதர்கள் சுவக்கீம், அன்னா (தூய கன்னி மரியாவின் பெற்றோர்) திருநாள். சில விருப்ப நினைவு, அதாவது கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும் என்றில்லை. எ. கா.: தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித சூசையப்பர் திருநாள் (மே 1), தூய கன்னி மரியாவின் மாசற்ற இருதயத் திருநாள், புனித அகுஸ்தினார் திருநாள்.
5. கத்தோலிக்க திருவையில் ஏன் புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது?
ஒரு எடுத்துக்காட்டான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு கத்தோலிக்க திருஅவையில் புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவ விசுவாசத்திற்க்காக உயிர் நீத்தவர்கள், துன்பப்பட்டவராகள், விசுவாசத்தை பாதுகாத்தவர்கள், விசுவாசத்திற்க்கு எடுத்துகாட்டாக வாழ்ந்தவர்கள், கத்தோலிக் கோட்பாடுகளை சிறப்பாக பின்பற்றியவர்கள், கத்தோலிக்க கோட்டபாடுகளுடன் தொண்டு செய்தவர்கள் போன்றவர்களுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது.
6. புனிதர் பட்டம் வழங்கப்படுவதற்கு முன் உள்ள நிலைகள் என்ன?
ஒருவர் இறந்த பின் பொதுவாக ஐந்து ஆண்டுகள் கழித்து தான் அவருக்கு புனிதர் வழங்குவது தொடர்பான வேலைகளை ஆரம்பிக்கலாம். திருத்தந்தை ஒப்புதல் அளித்தால் ஐந்து வருடத்திற்குள்ளாகவே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான வேலைகளை ஆரம்பிக்கலாம்.
நிலைகள்
- இறை ஊழியர்
- வணக்கத்துக்குரியவர்
- முத்திப்பேறு பெற்றவர் / ஆசிர்வதிக்கப்பட்டவர்
- புனிதர்
7. இறை ஊழியர் என்பவர் யார்?
இறை ஊழியர் (Servant of God) – ஒருவர் வாழ்ந்த / மறைந்த ஊரின் மக்கள் / துறவியர் அவர்களின் ஆயரிடம் அவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று அவரை பற்றிய குறிப்புடன் கோரிக்கை வைக்கலாம். ஆயர் அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து புனிதர்களின் அலுவலலுக்கான பேராயத்திற்க்கு (Congregation for the Causes of Saints) அனுப்பி வைப்பார். ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று ஒப்புதல் கிடைத்த பிறகு அவரை இறை ஊழியர் என்று அழைக்கலாம்.
8 வணக்கத்துக்குரியவர் என்பவர் யார்?
வணக்கத்துக்குரியவர் – ஒரு இறை ஊழியர் தூய்மையான கத்தோலிக்க வாழ்கை வாழ்ந்தார் என்று திருத்தந்தை அங்கிகரித்தால் அவர் வணக்கத்துக்குரியவர் என்று அழைக்கப்படுவார்.
13. முத்திப்பேறு பெற்றவர் / ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பவர் யார்?
முத்திப்பேறு பெற்றவர் / ஆசிர்வதிக்கப்பட்டவர் (Blessed) – வணக்கத்துக்குரியவரின் பரிந்துரையால் புதுமை ஏதும் நடந்து அது திருஅவையால் கண்டுணரப்பட்டால் அவர் முத்திப்பேறு பெற்றவர் / ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று அழைக்கப்படுவார். அவர் நிச்சயாமாக விண்ணகத்தில் இருக்கிறார் என்றும் பரிந்து பேசும் வல்லமை பெற்றவர் என்றும் திருஅவையால் உறுதி செய்யப்படும்.
வணக்கத்துக்குரியவர் வேத சாட்சியாக ( விசுவாசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்/கொலை செய்யப்பட்டவர்) இருந்தால் புதுமை அவசியமில்லை. மாறாக அவர் விசுவாசத்திற்காக அல்லது பிறரின் நலனில் அக்கறை கொண்டு மனமுவந்து உயிர் துறந்தார் என்று திருத்தந்தையால் அறிவிக்கப்பட வேண்டும். இந்த அங்கீகாரம் வழங்குவதை/சான்றளித்தலை அருளாளர் பட்டம் / முத்திப்பேறு பட்டம் (beatification) என்று அழைக்கப்படுகிறது.
13. புனிதர் என்பவர் யார்?
புனிதர் – ஆசிர்வதிக்கப்பட்டவரின் பரிந்துரையால் மேலும் ஒரு புதுமை நடந்து அது அங்கிகரிக்கப்பட்டால் அவர் புனிதர் என்று திருத்தந்தையின் திருப்பலியில் அறிவிக்கப்படுவார்.